வியாழன், 25 மார்ச், 2010

ஒரு ப்ளட் டெஸ்ட்டும் பஸ் பயணமும்

ஏற்கனவே தீர்மானித்திருந்தபடி இன்று காலை பேரன் வந்து இரத்தப் பரிசோதனை செய்வதற்காக 'lab' இற்கு அழைத்துப்போனார். உள்ளே பதினான்கு பேர் அமர்ந்திருந்ததைக் கண்டதும் இன்று மதியம் தான் 'காலை உணவு சாப்பிடலாம்' என்று நினைத்தேன். நேற்று இரவு உணவு எட்டு மணிக்குச்சாப்பிட்டது என்று யோசித்தபடி உட்கார்ந்தோம். ஐந்தாவது நிமிடமே என்னை அழைத்தும் ஆச்சரியத்தோடு எழுந்து சென்றேன். வெளியே வருகையில் கணவர் மறு அறைக்குள் போயிருந்தார்.

பதினைத்து நிமிடங்களில் முடிந்துவிட வீடு வந்து சேர்ந்தோம்.

காலையுணவை முடித்துவிட்டு ஓய்வெடுக்க நினைக்கவும் போனில் அழைப்பு வரவும் சரியாயிருந்தது. போனில் குட்டிப்பெண் அனான்யா "கிராண்ட்மா நாங்கள் கோவிலுக்குப் போகிறோம். நீங்களும் வாருங்கள்." என்றார். மறுக்க முடியவில்லை. புறப்பட்டோம். வழி எல்லாம் ஒரே கும்மாளம். "bus" இல் ஏறினவுடன் 'எங்கே பெல்ட்?' என்று கேட்டார்கள்.

கோவிலில் வழிபாடு முடிந்ததும் அண்மையில் இருந்த எங்கள் நண்பர்களின் விடுகளுக்கும சென்று,

வீட்டுக்குத் திரும்பிய போது மணி இரண்டைத் தாண்டியிருந்தது.

புதன், 10 மார்ச், 2010

பக்கத்து யுனிட் குட்டிப்பெண்கள் பாகம் - 2

இன்று காலை நடக்கப் போவதற்காக (walk) நாங்கள் எங்கள் 'ட்றைவ்வே'யைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்த போது பின்னால் "க்ரான்ட்மா, க்ரான்ட்பா" என்று சத்தமிட்டபடி குட்டிப் பெண்கள் ஓடி வந்தார்கள். எங்களுடன் வரவேண்டுமென்று அடம் பிடிக்கவும் அவர்களது தாயும் வரவே எல்லோரும் நடையைத் தொடர்ந்தோம். பேச்சும் தொடர்ந்தது.

"எங்கே போய் வருகிறீர்கள்?" இது நான்.
"சிங்கிள் பார்க்கிற்கு." இது பெரிய பெண்.
"வேறு என்ன பார்க்கிற்குப் போவீர்கள்?"
"சிறிய பார்க்கிற்கும், பெரிய பார்க்கிற்கும் போவோம்."
"ஓ! அப்படியா? பெரிய பார்க் எங்கே இருக்கிறது?"
"அது மிகத் தூரத்தில் இருக்கிறது. அப்பா எங்களைக் கூட்டிப் போவார். சீசோ, ஊஞ்சல்கள், ஸ்லைடர்கள், இன்னும் பல விளையாட்டுக்கள் அங்கே விளையாடலாம். மாடுகள், செம்மறி ஆடுகள், பறவைகள் எல்லாம் பார்க்கலாம். ஆனால் அவையொன்றும் உடைகள் போடவில்லை," என்று சொல்லிக் கதையை நிறுத்தினாள்.

எனக்குப் பழைய கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.


சில மாதங்களுக்கு முன் ஒரு செவ்வாய்க்கிழமை, செவ்வாயும் புதனும் அவர்களின் தாய்க்கு விடுமுறை. எனவே குழந்தைகளும் வீட்டில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் பெரும் பரபரப்பாக இருந்தது. தாய் உடைகளைக் கழுவுவதற்காகச் சலவை இயந்திரத்தில் போட்டுவிட்டு வந்து பார்த்திருக்கிறார். காற்றுக்குக் கதவு பூட்டுப்பட்டு விட்டது. பிள்ளைகள் உள்ளே. சாவியும் உள்ளே. மறுபுறம் முழுவதும் கண்ணாடிச் சுவர். அந்தப் பக்கம் சென்று பெரியவளைக் கதவைத் திறக்கும்படி கெஞ்சிக்கொண்டிருந்தார். அவளுக்கோ எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இருவரும் திருதிருவென விழித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பிறகு, எங்கள் போனில் அவர்கள் தந்தையை அழைத்துச் சொல்ல அவர் வந்து திறந்து விட்டார். பெரியவள் 'விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பது போல் "க்ரான்ட்மா! எனது நகங்களுக்குப் பொளிஷ் போட்டதால் தான் என்னால் திறக்க முடியவில்லை" என்றாள். ஆனால் இப்போது கதவைத் திறக்கும் அளவு வளர்ந்து விட்டாள்