ஞாயிறு, 23 மே, 2010

இமா குழந்தையாக


இமா குழந்தையாக இருந்த போது சமையல் செய்தாலும் உடைகள் தோய்க்கும் போதும் pram இல் இருக்க வைத்து ஏதாவது குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள் சொல்லிக் கொடுப்பேன். அவவும் முடிந்தவரை திருப்பிச் சொல்லுவா. ஒன்றரை வயதிலேயே கதைக்க ஆரம்பித்து விட்டா. பாடசாலை போகையில் பக்கத்து வீட்டு ஆச்சியிடம் விட்டுப் போவேன்.

அடுத்த குழந்தையும் கிடைக்க இருந்ததால் இடம் போதாமையால் வேறு வீடு மாற வேண்டி ஏற்பட்டது. அங்கும் ஒரு வயதான தம்பதியர் பெருமளவு உதவியாக இருந்தனர். இமாவுக்கு இரண்டு வயது நிறைவுற்றுச் சில நாட்களில் மகன் பிறந்தார்.

ஒரு மாத காலம் நான் வீட்டில் நின்றேன். பிரசவ விடுப்பு முடிந்து பாடசாலை திரும்புவதற்கு முன்னர் குழந்தையைப் பராமரிக்க ஒரு பெண்ணை ஒழுங்கு செய்தோம். காலை ஆறரை மணி முதல் மாலை ஆறு மணி வரை தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வார். வயதான பறங்கிப் பெண் என்பதால் 'மம்மா ' என்று அழைப்போம். பிள்ளைகள் இருவரையும் மிக அன்பாகப் பராமரித்ததால் எங்களுக்கு அவரை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

சில மாதங்கள் கடந்த பின் ஒரு நாள் பாடசாலையிலிருந்து வந்ததும் மம்மா தேனீரைத் தந்த பின் "உங்களிடம் ஒரு விடயம் பேச வேண்டும் தம்பியும் (அப்படித்தான் என் கணவரை அழைப்பார்,) வரட்டும்" என்றார்.

இவர் வந்ததும் "தம்பி, தங்கச்சி, நான் வேறு வேலைக்குப் போகப் போகிறேன். இமா எனக்கு நல்ல ஐடியா ஒன்று சொல்லி இருக்கிறா.' என்றா. பின்னர் அவர்களுக்கிடையே நடந்த உரையாடலைச் சொன்னா.

"மம்மா உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?"

"கிழமைக்கு இருபது ரூபா "

"அவ்வளவு தானா? இது உங்களுக்குப் போதுமா?"

"போதாதுதான், என்ன செய்கிறது?"

"நீங்கள் ஏன் இங்கே வேலை செய்ய வேண்டும்? வேறு வேலைக்குப் போகலாமே?"

"எங்கே போவது? எனக்கு யார் வேலை தருவார்கள்?"

"நீங்கள் port cargo வில் (துறைமுக அதிகாரசபையில்) வேலைக்குப் போனால் நிறையச் சம்பளம் தருவார்கள்."

"ஓ! அப்படியா, எவ்வளவு கிடைக்கும்?"

"ஒரு நாளுக்கு நூறு ரூபா கிடைக்கும்."

"அது சரி, தம்பியை யார் பார்ப்பது?"

"நான் பார்ப்பேன்."

இப்படியே நீண்ட உரையாடல் நடக்குமாம். பின்னரும் பல முறை மம்மா சொல்லி சிரிப்பா.

சனி, 22 மே, 2010

அனுதாபங்கள்





















மங்களூர் விமான விபத்தில் சிக்கிய அனைவர் குடும்பக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செபா

சனி, 8 மே, 2010

இது இன்னொரு மாணவர் பற்றிய நினைவுகள்

















சுஜன்
முதல் நாள் பாடசாலைக்கு வந்த போது ஏனைய மாணவர்களைப்போல் அழவில்லை ஆயினும் முகத்தில் மகிழ்ச்சியில்லை. என் அருகிலேயே நின்றார். சிறிது நேரம் கழிந்ததும் "நான் வீட்டுக்குப் போக வேண்டும். போனில் அப்பாவை அழையுங்கள்." என்றார். "நீங்கள் போய் இடத்தில் இருங்கள். சிறிது நேரத்தில் வெளியே போய் விளையாடலாம்." என்றேன். அவர் அசைவதாயில்லை. தொடர்ந்து வந்த நாட்களிலும் தனது நாற்காலியை என் பக்கமாகப்போட்டுக்கொண்டிருந்து விட்டார்.

அடுத்த
வாரத்தின் முதல்நாள், பாடசாலை ஆரம்பிக்க முன்னர் ஆசிரியர்களுக்குக் கூட்டம் நடை பெற்றது. சுஜன் திடீரென ஆசிரியர்களின் அறைக்குள் நுழைந்து எனக்குப் பக்கத்தில் நின்று விட்டார். மெதுவாக அவரை வெளியே அழைத்துப் போய் வகுப்பில் இருக்கும்படி சொல்லி விட்டு வந்திருந்தேன். சற்று நேரத்தில் மற்ற ஆசிரியர்கள் திரும்பிப் பார்க்கவே நானும் திரும்பினேன். இவர் என் பின்னே யன்னல் அருகில் வெளியே நின்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். கூட்டம் முடிந்தவுடன் அவரை அழைத்துப் பல முறை சொன்னபின் ஒருவாறு முதல் வரியில் அமரத் தொடங்கினார். அதுவும் பாடசாலை முடிந்ததும் வீட்டிலிருந்து யாரேனும் வருகிற வரை நான் அவரோடு இருக்க வேண்டுமென்ற நிபந்தனையோடுதான்.

இரண்டு
மாதங்கள் கடந்து விட்டன. அன்று எனது மகனுக்குக் கடுமையான காய்ச்சல். மருந்தைக்கொடுத்து விட்டுத் தேவையானவைகள் யாவும் எடுத்து வைத்து விட்டுப் பாடசாலை போனேன். மதிய இடைவேளையின் போது இவரை அதிபரின் அறையின் முன் இருக்க விட்டு அவசரமாக வீட்டுக்குப் போனேன். எங்கள் தெருவை அண்மித்ததும் பின்னால் யாரோ தொடர்வது தெரிந்து திரும்பினால், சுஜன் நிற்கிறார். என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டுக்கு அழைத்துப் போனேன். காய்ச்சலோடு இருந்த மகன்தான் சைக்கிளில் கொண்டு போய் விட்டார். திரும்ப வந்தவுடன் அவரைக் கவனித்து விட்டு அவசரமாகப் பாடசாலை திரும்பினேன்.

நான்கு
மாதங்கள் கடந்த பின் ஒரு சனிக்கிழமை அவருடைய சித்தப்பா வந்து எங்களை அவர்கள் வீட்டுக்கு மதிய உணவுக்கு மறுக்காமல் வரும்படி அழைத்தார். சம்மதமானால் தானே வந்து அழைத்துப் போவேன் என்றார். அங்கு போனதும்தான் அவர் இப்படி இருப்பதற்கான காரணம் புரிந்தது. வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தப்பா, அத்தைமார்களோடு ஒரு தம்பியும் தங்கையும் இருந்தார்கள். சிறியவர்கள் இருந்தும் இவர் வீட்டில் செல்லப்பிள்ளை. இவர் சொல்வதெல்லாமே அங்கு நடக்கும்.

அது
முதல் அவர்கள் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் நாங்கள் கலந்து கொள்வோம். கிட்டத்தட்ட நெருங்கிய உறவுகள் போலாகி விட்டோம்.

இப்போ திருமணம் செய்து தந்தையாகக் காத்திருக்கிறார் இவர். அவர்கள் இன்றும் எங்களுடன் தொடர்பு வைத்து இருக்கிறார்கள் என்பது மிக மகிழ்ச்சியான விடயம்.