வெள்ளி, 30 ஏப்ரல், 2010

எதிர்பாராத முத்தம்

முதல் வகுப்பு மாணவர்கள் என்னிடம் படித்தபோது கிடைத்தது இது.
அவ்வருடம் வகுப்பில் நாற்பத்தேழு குழந்தைகள் இருந்தார்கள். அப்போதெல்லாம் காலை எட்டு மணிக்குப் பாடங்கள் தொடங்கிப் பத்துமணி வரை நடக்கும். பின் பதினைந்து நிமிட இடைவேளை. பிள்ளைகள் சற்றுநேரம் வெளியே போய்த் தாங்கள் கொண்டு வந்திருக்கும் சிற்றுண்டிகளை உண்டு முடித்து, குளிர் பானங்களை அருந்திவிட்டு வருவார்கள். தொடர்ந்து பாடங்கள் நடைபெற்று, பன்னிரண்டு மணியுடன் வகுப்புகள் முடிவுறும்.
ஒரு மாணவன் இடைவேளையின் பின்னர் வகுப்பில் இல்லாததை அவதானித்தேன். மறு நாள் அவனிடம் விசாரித்த போது அப்பா அழைத்துப் போனதாகச் சொன்னான். 'இனிமேல் இப்படிச்செய்யாதே' என்று சொல்லி விட்டுவிட்டேன்.
அன்றும் அவன் இடைவேளையின் பின்னர் மாயமாகி விட்டான்.
மறு நாள் ஆளைத் தப்ப விடக் கூடாது என்று இடைவேளை விடுவதற்கு முன்னதாகவே கதவுக்குக் கிட்ட நாற்காலியைப்போட்டு உட்கார்ந்து அப்பியாசக் கொப்பிகளைத் திருத்த ஆரம்பித்தேன்.
எதிர்பாராத வேளை திடீரென ஒருவர் என்னை அணைத்து இரு கன்னங்களிலும் முத்தமிட திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.
'டீச்சர், போய்விட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டுத் தடுக்கு முன் பதிலுக்குக் காத்திராமல் ஓடி விட்டார் அவர்.
மறு நாள் அவரது தந்தையை அழைத்து, பாடசாலை விட்டதும் தான் அழைத்துப் போகலாம் என்று சொல்லி விட்டேன். அதன் பின்னர் ஒழுங்காக வகுப்பிலிருந்தார்.
நான் ஒய்வு பெற்ற பின்னர் ஒருதடவை தெருவில் இந்த மாணவனைச் சந்தித்தேன். வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்து சென்றார்.

திங்கள், 26 ஏப்ரல், 2010

அத்தான்

ஆசிரியையாய் என் அனுபவங்கள்
அத்தான்

பெரும்பான்மையாக புதிதாகப் பாடசாலையில் சேருகின்ற (அதாவது முதலாம் ஆண்டு) மாணவர்களுக்கே என்னை ஆசிரியராக நியமிப்பார்கள். முதல் நாள் அழுகையுடன் தான் அநேகர் வருவார்கள். அன்றும் தொடர்ந்து வந்த நாட்களிலும் பல சுவையான, மறக்க முடியாத அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு.

ஒரு மாணவரை, ஒருவர் வகுப்பில் விட்டு விட்டுப் போகவும் மாணவன் 'அத்தான், அத்தான்' என்று அழுது கொண்டு பின்னால் ஓடினார். ஒருவாறு சமாளித்து அழைத்து வந்து வகுப்பில் உட்கார வைத்தேன்.

சிறிது நேரத்தின் பின் அதிபர் வகுப்பைப் பார்வையிட வந்தார். அவர் என்னிடம் பேசி விட்டு வெளியே போகவும் சின்னவர் 'தம்பி, தம்பி இங்கே வாருங்கோ' என்று அழைக்க அதிபரும் நகைச்சுவையாகப் பேசுபவர், ' என்ன அண்ணே! உங்களுக்கு என்ன வேண்டும்?' என்றார். 'எனது அத்தானை வந்து என்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லுங்கள்.' அதிபர் 'சரி அவர் வரும்வரை வகுப்பில் இருங்கள்,' என்றுசொல்லி விட்டுப் போனார்.

மதியம் அழைத்துப்போக வந்தவரிடம் 'மாணவன் உங்களுக்கு என்ன உறவு?' என்று கேட்டேன். 'நான் அவனுடைய அப்பா' என்றதும் தான் அவனது தாயார் அழைப்பதைக் கேட்டு அழைக்கிறான் என்பது புரிந்தது.

வியாழன், 22 ஏப்ரல், 2010

வியட்நாம் நண்பி அளித்த விருந்து

வியட்னாம் நண்பி எங்களை ஒரு நாள் விருந்துக்கு வரும்படி அழைத்தார். நான் மறுக்கவும் காரணம் கேட்டார். "ஒவ்வாமை காரணமாக அநேக உணவுகளை நான் சாப்பிட முடியாது என்றேன்." பரவாயில்லை உங்களுக்குச் சரிவராதவற்றை விட்டு விடுகிறேன். நாளை எனது தாய்லாந்து நண்பி ஊருக்குப்போகிறார். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கட்டாயம் வரவேண்டும்." என்று வற்புறுத்தினார். அவரது கணவர் வந்து எங்களைக் காரில் அழைத்துப் போனார். தாய்லாந்துப்பெண், அவர் கணவர் நியூஸிலாந்தைச சேர்ந்தவர். அவர்களது குழந்தை, எங்களது நீண்ட நாள் நண்பி ஜெசி, குழந்தைகள் இருவர், இன்னுமோர் சீனப் பெண், இத்தனை பேர்தான் விருந்துக்கு வந்தவர்கள். உள்ளே போனதுமே எனக்குச் சமையல் வாசனையில் மூச்சுத் திணற ஆரம்பித்தது. நான் "inhaler" ஐ எடுத்துக்கொண்டு சற்று நேரம் வெளியே நின்று விட்டேன். திரும்ப உள்ளே வந்தவுடன் ஜெஸியின் குழந்தைகள் அருகில் வந்து உட்கார்ந்து விட்டார்கள். சாப்பாட்டு மேசைக்குப் போகும் வரை அவர்கள் அசையவில்லை. பின்னர் அறிமுகப்படலம் நடந்தது. சற்று நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பிறகு, சாப்பிட அழைத்தார்கள். மேசையில் எனக்காகவென பிரியாணி, சிக்கன் கறி, சலட் என்பன தயாராக இருந்தன. மேலும் பல உணவுகள் தயாராக இருந்தாலும எனக்கு ஏற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு மீண்டும் வீடு வந்தோம். அன்றையப் பொழுது இனிமையாகக் கழிந்தது.

புதன், 14 ஏப்ரல், 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செபா.