செவ்வாய், 20 ஜூலை, 2010

பிறந்த நாள் பரிசு

வருகிற சனியன்று குட்டிப் பெண் அனிக்காவின் பிறந்தநாள்.

இவளது முதலாவது பிறந்தநாள் உணவகம் ஒன்றில் நன்றாகக் கொண்டாடப்பட்டது. அடுத்த வருடம் தங்கை அனன்யாவும் பிறந்து விட்டதோடு அவர்களது தாய் வழிப் பாட்டியும் இறந்து விட்டார். எனவே ஆரவாரமாகப் பிறந்தநாள் கொண்டாடுவது நின்று விட்டது. உறவினர் எல்லோருமே இந்தியாவில் வசிப்பதால் எங்களை மட்டுமே அழைத்து வீட்டில் கேக் வெட்டி இரவு உணவும் தருவார்கள்.
அனிக்காவிடம் "இம்முறை என்ன பிறந்தநாள் பரிசுகள் கிடைக்கும்?" என்று கேட்டேன்.

"அப்பாவிடம் அவரது கார் போலப் பெரிய கார் வாங்கித் தரும் படி கேட்டிருக்கிறேன். அம்மா எனக்கு நல்ல கமரா வாங்கித் தருவா" என்றாள்.

"சரி. நாங்கள் என்ன தரவேண்டும்?" என்று கேட்டேன். தயங்காமல் வந்த பதில் "அழகான பெரிய சாறி வேண்டும்."
அவளது பதிலைக் கேட்டதும் "நன்றாகப் பெரியவளாக வளர்ந்ததும் இவைகளை நீ கேட்காமலே நாங்கள் வாங்கித் தருவோம்." என்று தாய் சொன்னா.
இது அவர்கள் வீட்டு வாசலில் உள்ள பூஞ்செடி.

வெள்ளி, 16 ஜூலை, 2010

தேன் வியாபாரம்


அன்று பேச்சுப் பாட வேளையில், ஒவ்வொரு மாணவரிடமும் அவரவர் குடும்ப உறுப்பினர் எத்தனை பேர், தந்தை என்ன தொழில் செய்கிறார் மற்றும் சகோதரர்கள் பற்றிய விபரங்களைக் கூறும்படி கேட்டேன்.

அப்படியே ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

ஒரு மாணவர் தனது தந்தை முன்பு கடற்கரையில் கடலை வியாபாரம் செய்து வந்ததாகவும் வருமானம் போதாததால் தேன் வியாபாரம் செய்கிறார் என்பதாகவும் சொன்னார்.

'வியாபாரம் செய்வற்கான தேனை எப்படிப் பெறுகிறார்?' என்று கேட்டேன்.
சற்றும் தாமதிக்காமல் 'வீட்டிலேயே செய்வார்,' என்றார்.

'எப்படி செய்வார்?' என்று கேட்டேன்.
'சர்க்கரையை நன்றாகக் காய்ச்சி ஆறவிடுவார். பிறகு போத்தல்களில் ஊற்றி அதன் மேலாக சிறிது தேனை விட்டுப் போத்தலை மூடி விடுவார்,' என்று சொன்னார்.

வருமானம் இல்லாமையே சிலரை இப்படியெல்லாம் செய்யத் தூண்டுகிறது.

ஆனாலும், குழந்தைகள் ஒரு போதும் பொய் பேச மாட்டார்கள்.

புதன், 14 ஜூலை, 2010

Tea Bun






























  
இவை ஒரு குட்டி மாணவரின் குறும்புத்தனங்கள்.

இந்த மாணவர்  பெயர் கோகுலன். முதலாம் ஆண்டு படித்தார். ஒரு நாள் பாடசாலை போனதும் கரும்பலகையை அழிப்பதற்கு duster ஐத் தேடினேன் காணவில்லை. மேசை துடைப்பதற்கென வைத்திருந்த துணியை எடுத்து உபயோகித்தேன்.

மாலையில் வீட்டில் சில குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். கோகுலனின் அக்காமார் இருவரும் வந்து படிப்பார்கள். அன்றும் அவர்கள் வந்தார்கள். படித்து முடிந்ததும் அழைத்துப் போக வருபவருக்காகக் காத்துக்கொண்டு நிற்கும் வேளை ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். அன்றும் அவர்கள் வீட்டில் என்ன சமையல், யார் வந்தார்கள், என்ன நடந்தது என்று சொல்லிக் கொண்டிருந்த  போது, "டீச்சர், கோகுலன் இன்று வகுப்பு duster  ஐ வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்து கழுவிக் கூரை மேல் காயப் போட்டிருக்கிறார்," என்றார்.   
 
"ஏன் அப்படிச் செய்தார்?" என்று கேட்டேன். "அதுவா! கெதியாக எங்கள் வீட்டில் குட்டிப் பாப்பா வரப் போகுது. அதற்குத் தலையணைக்குத்தான்," என்றார்கள்.
 
மறு நாள் பாடசாலையில் விசாரித்தேன். அது தனக்கு வேண்டும், தனக்கு வேண்டும் என்றார். இரண்டு வாரங்களின் பின் தம்பிப் பாப்பா பிறந்து விட்டார் என்ற செய்தியோடு வந்தார்.
 
"சரி, பாப்பாவிற்கு என்ன பெயர்?" என்று கேட்டேன். "டீ பன்" (தீபன்) என்றார். அன்று முதல் "தம்பி பெயர் என்ன?" என்பதும், அவர் "டீ பன்" என்பதும் சகஜமாகி விட்டது.
 
இன்னொரு நாள் இடைவேளையின் போது, ஒரு பெரிய வகுப்பு மாணவரை அழைத்து கன்டீனில் எனக்குத் தேனீர் வாங்கி வரும்படி அனுப்பினேன். சிறிது நேரத்தில் அவர் தேனீருடன் வடையும் கொண்டு வந்து நான் கொடுத்த பணத்தையும் திரும்பத் தந்தார். "கோகுலன் பக்கத்தில் இருந்த தன் வீட்டிற்குப் போய்த் தேனீரும் கூடவே சாப்பிடவும் ஏதாவதும் வாங்கி வரும்படி சொன்னார்," என்றார்.
 
இந்தக் கதையில் வரும் குழந்தைகள் நான்கு பேரும் பிற்பாடு நாட்டு நிலமை காரணமாகப் பெற்றோருடன் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள். இப்போது எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை.

சனி, 10 ஜூலை, 2010

விருதுகள்

விருதுகள் வழங்கிய அன்பர்களுக்கு ,
விருதுகளை எனது பக்கத்திற்குக் கொண்டு வருவது எப்படிஎனத் தெரியாததால் தான் இத்தனை தாமதம். இதற்காக என்னை மன்னிக்கவும். 
க்ரௌன் விருது வழங்கிய ஸாதிகா,  தங்க மகன், தேவதை விருதுகளை வழங்கிய ஜெய்லானி மற்றும் செல்வி உங்கள் மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இதோ,
உங்களுக்கு எங்கள் தோட்டத்து மாதுளங்கனிகள் - மாது உளம் கனிகள், இச்சொல் இரு பொருள் தரும் சொல். ஒரு சிலேடைச்சொல். கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பது போல் இவையும் மிகவும் சுவையானவையே. எடுத்துச் சுவையுங்கள்.
நன்றி.
அன்புடன்,
செபா.

திங்கள், 5 ஜூலை, 2010

எனது மூன்று நண்பிகள்

கடந்த வருடம் பங்குனி மாதத்தின் இறுதியில் ஓர் நாள் காலை மருத்துவப் பரிசோதனைக்குப் போவதற்காக எங்கள் 'drive way ''முடிவில் வாடகைக் காருக்குக் காத்துக் கொண்டு நாங்கள் நின்றோம்.

அவ்வழியே போன இளம் பெண்ணொருவர் திரும்பி வந்தார். "ஆன்டி, நீங்கள் இந்தியரா?" என்று கேட்டார். " இல்லை" என்றதும் "அப்போ நீங்கள் இலங்கையரா?" என்று கேட்டார்.

"ஆம். நாங்கள் இலங்கைத் தமிழர்," என்று சொன்னதும் அவர் முகத்தில் மகிழ்ச்சி.

உரையாடல் தமிழில் தொடர்ந்தது. எங்களைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டார். எங்கள் பக்கத்தில் உள்ள பாடசாலையில் அவர் மகள் படிப்பதாகவும் பெற்றார் ஆசிரியர் சந்திப்புக்காக தான் போவதாகவும் பின்னர் சந்திப்போம் என்று சொல்லிச் சென்றார்.

அன்று பின்னேரம் மூன்று மணிக்குப் பின் எங்கள் வீட்டுக்குத் தன் நண்பிகளையும் அழைத்துக்கொண்டு வந்தார். எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். "நாங்கள் பிள்ளைகளைப் பாடசாலையில் விட அல்லது அழைத்துப் போக வரும் போது அடிக்கடி உங்களை வந்து சந்திப்போம். உதவி ஏதும் தேவைப்பட்டால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்," என்று சொல்லித் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள்.

அதன் பின்னர் நேரம் கிடைக்கும் போது வந்து எங்களை அவர்களது வீட்டுக்கு அழைத்துப் போவார்கள். இவர்களது குழந்தைகளும் தாத்தா, பாட்டி என எங்களை அன்போடு அழைப்பார்கள்.

இந்த மூன்று பெண்களின் கணவர்களும் எம்முடன் மிக அன்பாக இருக்கிறார்கள். தெருவில் நாங்கள் நடந்து போவதைக் கண்டால் உடனே "காரில் ஏறுங்கள், கொண்டு போய் விடுகிறேன்," என்று அழைப்பார்கள்.

திங்கள், புதன் ஆகிய நாட்களில் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னதாகக் கமலாவின் மூத்த மகளுக்கு சங்கீதப் பயிற்சி இருக்கும். அந்த நாட்களில் இளைய மகளுடன் இங்கு வந்து விடுவா. எனக்கு மரக்கறிகள் வெட்டுவது போன்ற சமையலுக்கான உதவிகளைச் செய்த பின் மகளைப் பாடசாலையில் விட்டு விட்டுப் போவா.

மருத்துவப் பரிசோதனைக்கு அல்லது இரத்தப் பரிசோதனைக்குப் போக வேண்டியிருந்தால் வந்து அழைத்துச் செல்வார்கள். வீட்டில் விஷேட உணவுகள் தயாரிக்கும் போதும் எங்களுக்கும் கொண்டுவரத் தவறுவதில்லை.

கமலா, மீனா, கௌதமியுடன் அவர்கள் வீட்டிற்கு வந்து போகும் அவர்களது நண்பிகளும் எங்களோடு அன்பாகப் பழகுவது எங்களுக்கு மிக மகிழ்ச்சியாகவும் தனிமையைக் குறைப்பதாகவும் உள்ளது.

இவர்களை நண்பர்களாகப் பெற்றது பெரிய அதிர்ஷ்டமே.

புதன், 23 ஜூன், 2010

ஒரு வித்தியாசமான அனுபவம்

சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் மாலை குட்டிப்பெண்கள் வீட்டுக்குப் போய் சிறிது நேரம் பொழுது போக்கிவிட்டு வீடு திரும்பினேன். எங்கள் கதவருகில் நின்றிருந்த ஒன்பதாம் யூனிட் நண்பர் திரும்பிப் போய்க்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த எனக்குப்
பெரிய அதிர்ச்சி. எங்கள் சமையலறை மேசையில் முழு ஆடு (உரித்ததுதான்) கிடத்தப்பட்டு மேசை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

பக்கத்தில் எனது கணவர் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தார். "என்ன நடந்தது?" என்று கேட்டேன். "ஆட்டிறைச்சி சாப்பிடுவீர்களா? என்று கேட்டார். 'ஆம்,' என்றதும் இதைக்கொண்டு வந்து கிடத்தி விட்டுப் போகிறார்," என்றார்.

"என்ன செய்வது? யாரிதை வெட்டுவது அப்படியே rabish bin இல் போட்டு விடுவோமா?" என்று கேட்டார். அப்படிப் போடுவதானாலும் துண்டுகளாக வெட்டித்தான் போட வேண்டும் "நீங்கள் இப்போ போய் நண்பர் சந்தோஷை அழைத்து வாருங்கள் பின் என்ன செய்வதென்று யோசிப்போம்," என்றேன்.

என் கணவர் என்ன சொன்னாரோ சந்தோஷும் (இவர்தான் பக்கத்து வீட்டுக் குட்டிப் பெண்களின் தந்தை.) தன்னிடமிருந்த பெரிய கத்தியுடன் வந்தார். அது மரக்கறி வெட்டத்தான் உபயோகப்படும். வந்து ஆட்டைப் பார்த்துவிட்டு, "ஓ! அங்கிள் இதனால் வெட்ட முடியாது," என்று சொல்ல என்னிடமிருந்த ஓரளவு பெரிய கத்தி ஒன்றைக் கொடுத்தேன்.

"இன்று நீங்கள் என்னை ஒரு butcher ஆக்கி விட்டீர்கள்," என்று சிரித்தவாறே வெட்டத் தொடங்கினார். உதவியாளராக நான். ஐந்தேகால் மணிக்குத் தொடங்கிய வேலை அரை மணி நேரத்தில் முடிந்ததது.

அவரிடம் "உங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொண்டு மீதியை இந்தப் பொலிதீன் பைகளில் போட்டு விடுகிறீர்களா?" என்று கேட்டேன். எல்லா வேலைகளும் முடிந்ததும் இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு போய் இரண்டு நண்பர்கள் வீட்டில் கொடுத்து விட்டு வந்தார். மற்றவைகளை மறுநாள் வேறு மூன்று நண்பர்கள் வந்து எடுத்துக் கொண்டு போனார்கள். அன்று அந்த மேசையைச் சுத்தம் செய்யும் வேலையும் என்னுடையதாயிற்று.

அடுத்த தடவை அந்த நண்பரைச் சந்தித்த போது எங்களுக்கு இனிமேலும் இப்படி வேலை தராதீர்கள் என்று அன்பாகக் கேட்டுக் கொண்டோம்.

மேலே இருப்பது என் பேரன் பாடசாலையில் படித்த காலத்தில் செய்த ஒரு ப்ரொஜெக்ட்.

செவ்வாய், 15 ஜூன், 2010

அப்பா செய்த மேடை

வீட்டிலிருக்கும்போது நான் ஏதாவது வேலைகள் இருந்தால் மகனைத் தொட்டிலில் படுக்கவைத்து விட்டுச் செய்வேன். அவர் எழுந்துவிட்டால் இமா தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடிக் கொண்டு தொட்டிலை ஆட்டுவா. சில வேளைகளில் பாட்டைக் கேட்டுக் கொண்டு மகன் திரும்ப நித்திரையாகி விடுவதுமுண்டு.

ஐந்து வயதானதும் நான் கடமையாற்றிய பாடசாலையிலேயே இமாவைச் சேர்த்தோம். அது பெண்கள் பாடசாலை. ஆனாலும் முதலாம், இரண்டாம் வகுப்புகளில் ஆண் குழந்தைகளும் படித்தார்கள். அங்கும் எனக்கு முதல் வகுப்புத்தான் (ஆண்கள் பிரிவு) கிடைத்தது.

பாடசாலையில் நடைபெற இருந்த நிகழ்வொன்றில் எல்லா வகுப்பு மாணவர்களும் ஏதாவது பாடல், நடனம் அல்லது நாடகம் கொடுக்க வேண்டுமென அதிபர் உத்தரவிட்டார். இரண்டு வகுப்பு மாணவர்களையும் சேர்த்து சக ஆசிரியரும் நானும் வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய பாடல் பழக்கினோம். உடைகள் சிறகுகள் எல்லாம் அழகாகத் தயாரித்தோம்.

குறிப்பிட்ட தினத்தன்று ஒத்திகை பார்க்க மேடைக்கு அழைத்துச் சென்ற போது இமா "மேடையில் நான் ஏற மாட்டேன், உடைந்து விடும்," என்று அழ ஆரம்பித்தா. என்னசெய்வதென நாங்கள் யோசித்துக் கொண்டிருக்க அங்கு வந்த அதிபர் "இமா, இது உங்கள் அப்பா செய்த மேடைதான். உடையவே உடையாது," என்று சொல்லிச் சமாளித்தார். பின்னர் யாவும் ஒழுங்காக நடந்தன.

பின்னேரம் அப்பா வீடு வந்ததும், "நீங்கள் செய்த மேடையில் ஏறி நான் பாட்டுப் பாடினேன் அப்பா," என்றா.