ஞாயிறு, 23 மே, 2010

இமா குழந்தையாக


இமா குழந்தையாக இருந்த போது சமையல் செய்தாலும் உடைகள் தோய்க்கும் போதும் pram இல் இருக்க வைத்து ஏதாவது குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள் சொல்லிக் கொடுப்பேன். அவவும் முடிந்தவரை திருப்பிச் சொல்லுவா. ஒன்றரை வயதிலேயே கதைக்க ஆரம்பித்து விட்டா. பாடசாலை போகையில் பக்கத்து வீட்டு ஆச்சியிடம் விட்டுப் போவேன்.

அடுத்த குழந்தையும் கிடைக்க இருந்ததால் இடம் போதாமையால் வேறு வீடு மாற வேண்டி ஏற்பட்டது. அங்கும் ஒரு வயதான தம்பதியர் பெருமளவு உதவியாக இருந்தனர். இமாவுக்கு இரண்டு வயது நிறைவுற்றுச் சில நாட்களில் மகன் பிறந்தார்.

ஒரு மாத காலம் நான் வீட்டில் நின்றேன். பிரசவ விடுப்பு முடிந்து பாடசாலை திரும்புவதற்கு முன்னர் குழந்தையைப் பராமரிக்க ஒரு பெண்ணை ஒழுங்கு செய்தோம். காலை ஆறரை மணி முதல் மாலை ஆறு மணி வரை தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வார். வயதான பறங்கிப் பெண் என்பதால் 'மம்மா ' என்று அழைப்போம். பிள்ளைகள் இருவரையும் மிக அன்பாகப் பராமரித்ததால் எங்களுக்கு அவரை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

சில மாதங்கள் கடந்த பின் ஒரு நாள் பாடசாலையிலிருந்து வந்ததும் மம்மா தேனீரைத் தந்த பின் "உங்களிடம் ஒரு விடயம் பேச வேண்டும் தம்பியும் (அப்படித்தான் என் கணவரை அழைப்பார்,) வரட்டும்" என்றார்.

இவர் வந்ததும் "தம்பி, தங்கச்சி, நான் வேறு வேலைக்குப் போகப் போகிறேன். இமா எனக்கு நல்ல ஐடியா ஒன்று சொல்லி இருக்கிறா.' என்றா. பின்னர் அவர்களுக்கிடையே நடந்த உரையாடலைச் சொன்னா.

"மம்மா உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?"

"கிழமைக்கு இருபது ரூபா "

"அவ்வளவு தானா? இது உங்களுக்குப் போதுமா?"

"போதாதுதான், என்ன செய்கிறது?"

"நீங்கள் ஏன் இங்கே வேலை செய்ய வேண்டும்? வேறு வேலைக்குப் போகலாமே?"

"எங்கே போவது? எனக்கு யார் வேலை தருவார்கள்?"

"நீங்கள் port cargo வில் (துறைமுக அதிகாரசபையில்) வேலைக்குப் போனால் நிறையச் சம்பளம் தருவார்கள்."

"ஓ! அப்படியா, எவ்வளவு கிடைக்கும்?"

"ஒரு நாளுக்கு நூறு ரூபா கிடைக்கும்."

"அது சரி, தம்பியை யார் பார்ப்பது?"

"நான் பார்ப்பேன்."

இப்படியே நீண்ட உரையாடல் நடக்குமாம். பின்னரும் பல முறை மம்மா சொல்லி சிரிப்பா.

சனி, 22 மே, 2010

அனுதாபங்கள்





















மங்களூர் விமான விபத்தில் சிக்கிய அனைவர் குடும்பக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செபா

சனி, 8 மே, 2010

இது இன்னொரு மாணவர் பற்றிய நினைவுகள்

















சுஜன்
முதல் நாள் பாடசாலைக்கு வந்த போது ஏனைய மாணவர்களைப்போல் அழவில்லை ஆயினும் முகத்தில் மகிழ்ச்சியில்லை. என் அருகிலேயே நின்றார். சிறிது நேரம் கழிந்ததும் "நான் வீட்டுக்குப் போக வேண்டும். போனில் அப்பாவை அழையுங்கள்." என்றார். "நீங்கள் போய் இடத்தில் இருங்கள். சிறிது நேரத்தில் வெளியே போய் விளையாடலாம்." என்றேன். அவர் அசைவதாயில்லை. தொடர்ந்து வந்த நாட்களிலும் தனது நாற்காலியை என் பக்கமாகப்போட்டுக்கொண்டிருந்து விட்டார்.

அடுத்த
வாரத்தின் முதல்நாள், பாடசாலை ஆரம்பிக்க முன்னர் ஆசிரியர்களுக்குக் கூட்டம் நடை பெற்றது. சுஜன் திடீரென ஆசிரியர்களின் அறைக்குள் நுழைந்து எனக்குப் பக்கத்தில் நின்று விட்டார். மெதுவாக அவரை வெளியே அழைத்துப் போய் வகுப்பில் இருக்கும்படி சொல்லி விட்டு வந்திருந்தேன். சற்று நேரத்தில் மற்ற ஆசிரியர்கள் திரும்பிப் பார்க்கவே நானும் திரும்பினேன். இவர் என் பின்னே யன்னல் அருகில் வெளியே நின்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். கூட்டம் முடிந்தவுடன் அவரை அழைத்துப் பல முறை சொன்னபின் ஒருவாறு முதல் வரியில் அமரத் தொடங்கினார். அதுவும் பாடசாலை முடிந்ததும் வீட்டிலிருந்து யாரேனும் வருகிற வரை நான் அவரோடு இருக்க வேண்டுமென்ற நிபந்தனையோடுதான்.

இரண்டு
மாதங்கள் கடந்து விட்டன. அன்று எனது மகனுக்குக் கடுமையான காய்ச்சல். மருந்தைக்கொடுத்து விட்டுத் தேவையானவைகள் யாவும் எடுத்து வைத்து விட்டுப் பாடசாலை போனேன். மதிய இடைவேளையின் போது இவரை அதிபரின் அறையின் முன் இருக்க விட்டு அவசரமாக வீட்டுக்குப் போனேன். எங்கள் தெருவை அண்மித்ததும் பின்னால் யாரோ தொடர்வது தெரிந்து திரும்பினால், சுஜன் நிற்கிறார். என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டுக்கு அழைத்துப் போனேன். காய்ச்சலோடு இருந்த மகன்தான் சைக்கிளில் கொண்டு போய் விட்டார். திரும்ப வந்தவுடன் அவரைக் கவனித்து விட்டு அவசரமாகப் பாடசாலை திரும்பினேன்.

நான்கு
மாதங்கள் கடந்த பின் ஒரு சனிக்கிழமை அவருடைய சித்தப்பா வந்து எங்களை அவர்கள் வீட்டுக்கு மதிய உணவுக்கு மறுக்காமல் வரும்படி அழைத்தார். சம்மதமானால் தானே வந்து அழைத்துப் போவேன் என்றார். அங்கு போனதும்தான் அவர் இப்படி இருப்பதற்கான காரணம் புரிந்தது. வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தப்பா, அத்தைமார்களோடு ஒரு தம்பியும் தங்கையும் இருந்தார்கள். சிறியவர்கள் இருந்தும் இவர் வீட்டில் செல்லப்பிள்ளை. இவர் சொல்வதெல்லாமே அங்கு நடக்கும்.

அது
முதல் அவர்கள் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் நாங்கள் கலந்து கொள்வோம். கிட்டத்தட்ட நெருங்கிய உறவுகள் போலாகி விட்டோம்.

இப்போ திருமணம் செய்து தந்தையாகக் காத்திருக்கிறார் இவர். அவர்கள் இன்றும் எங்களுடன் தொடர்பு வைத்து இருக்கிறார்கள் என்பது மிக மகிழ்ச்சியான விடயம்.

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

எதிர்பாராத முத்தம்

முதல் வகுப்பு மாணவர்கள் என்னிடம் படித்தபோது கிடைத்தது இது.
அவ்வருடம் வகுப்பில் நாற்பத்தேழு குழந்தைகள் இருந்தார்கள். அப்போதெல்லாம் காலை எட்டு மணிக்குப் பாடங்கள் தொடங்கிப் பத்துமணி வரை நடக்கும். பின் பதினைந்து நிமிட இடைவேளை. பிள்ளைகள் சற்றுநேரம் வெளியே போய்த் தாங்கள் கொண்டு வந்திருக்கும் சிற்றுண்டிகளை உண்டு முடித்து, குளிர் பானங்களை அருந்திவிட்டு வருவார்கள். தொடர்ந்து பாடங்கள் நடைபெற்று, பன்னிரண்டு மணியுடன் வகுப்புகள் முடிவுறும்.
ஒரு மாணவன் இடைவேளையின் பின்னர் வகுப்பில் இல்லாததை அவதானித்தேன். மறு நாள் அவனிடம் விசாரித்த போது அப்பா அழைத்துப் போனதாகச் சொன்னான். 'இனிமேல் இப்படிச்செய்யாதே' என்று சொல்லி விட்டுவிட்டேன்.
அன்றும் அவன் இடைவேளையின் பின்னர் மாயமாகி விட்டான்.
மறு நாள் ஆளைத் தப்ப விடக் கூடாது என்று இடைவேளை விடுவதற்கு முன்னதாகவே கதவுக்குக் கிட்ட நாற்காலியைப்போட்டு உட்கார்ந்து அப்பியாசக் கொப்பிகளைத் திருத்த ஆரம்பித்தேன்.
எதிர்பாராத வேளை திடீரென ஒருவர் என்னை அணைத்து இரு கன்னங்களிலும் முத்தமிட திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.
'டீச்சர், போய்விட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டுத் தடுக்கு முன் பதிலுக்குக் காத்திராமல் ஓடி விட்டார் அவர்.
மறு நாள் அவரது தந்தையை அழைத்து, பாடசாலை விட்டதும் தான் அழைத்துப் போகலாம் என்று சொல்லி விட்டேன். அதன் பின்னர் ஒழுங்காக வகுப்பிலிருந்தார்.
நான் ஒய்வு பெற்ற பின்னர் ஒருதடவை தெருவில் இந்த மாணவனைச் சந்தித்தேன். வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்து சென்றார்.

திங்கள், 26 ஏப்ரல், 2010

அத்தான்

ஆசிரியையாய் என் அனுபவங்கள்
அத்தான்

பெரும்பான்மையாக புதிதாகப் பாடசாலையில் சேருகின்ற (அதாவது முதலாம் ஆண்டு) மாணவர்களுக்கே என்னை ஆசிரியராக நியமிப்பார்கள். முதல் நாள் அழுகையுடன் தான் அநேகர் வருவார்கள். அன்றும் தொடர்ந்து வந்த நாட்களிலும் பல சுவையான, மறக்க முடியாத அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு.

ஒரு மாணவரை, ஒருவர் வகுப்பில் விட்டு விட்டுப் போகவும் மாணவன் 'அத்தான், அத்தான்' என்று அழுது கொண்டு பின்னால் ஓடினார். ஒருவாறு சமாளித்து அழைத்து வந்து வகுப்பில் உட்கார வைத்தேன்.

சிறிது நேரத்தின் பின் அதிபர் வகுப்பைப் பார்வையிட வந்தார். அவர் என்னிடம் பேசி விட்டு வெளியே போகவும் சின்னவர் 'தம்பி, தம்பி இங்கே வாருங்கோ' என்று அழைக்க அதிபரும் நகைச்சுவையாகப் பேசுபவர், ' என்ன அண்ணே! உங்களுக்கு என்ன வேண்டும்?' என்றார். 'எனது அத்தானை வந்து என்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லுங்கள்.' அதிபர் 'சரி அவர் வரும்வரை வகுப்பில் இருங்கள்,' என்றுசொல்லி விட்டுப் போனார்.

மதியம் அழைத்துப்போக வந்தவரிடம் 'மாணவன் உங்களுக்கு என்ன உறவு?' என்று கேட்டேன். 'நான் அவனுடைய அப்பா' என்றதும் தான் அவனது தாயார் அழைப்பதைக் கேட்டு அழைக்கிறான் என்பது புரிந்தது.

வியாழன், 22 ஏப்ரல், 2010

வியட்நாம் நண்பி அளித்த விருந்து

வியட்னாம் நண்பி எங்களை ஒரு நாள் விருந்துக்கு வரும்படி அழைத்தார். நான் மறுக்கவும் காரணம் கேட்டார். "ஒவ்வாமை காரணமாக அநேக உணவுகளை நான் சாப்பிட முடியாது என்றேன்." பரவாயில்லை உங்களுக்குச் சரிவராதவற்றை விட்டு விடுகிறேன். நாளை எனது தாய்லாந்து நண்பி ஊருக்குப்போகிறார். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கட்டாயம் வரவேண்டும்." என்று வற்புறுத்தினார். அவரது கணவர் வந்து எங்களைக் காரில் அழைத்துப் போனார். தாய்லாந்துப்பெண், அவர் கணவர் நியூஸிலாந்தைச சேர்ந்தவர். அவர்களது குழந்தை, எங்களது நீண்ட நாள் நண்பி ஜெசி, குழந்தைகள் இருவர், இன்னுமோர் சீனப் பெண், இத்தனை பேர்தான் விருந்துக்கு வந்தவர்கள். உள்ளே போனதுமே எனக்குச் சமையல் வாசனையில் மூச்சுத் திணற ஆரம்பித்தது. நான் "inhaler" ஐ எடுத்துக்கொண்டு சற்று நேரம் வெளியே நின்று விட்டேன். திரும்ப உள்ளே வந்தவுடன் ஜெஸியின் குழந்தைகள் அருகில் வந்து உட்கார்ந்து விட்டார்கள். சாப்பாட்டு மேசைக்குப் போகும் வரை அவர்கள் அசையவில்லை. பின்னர் அறிமுகப்படலம் நடந்தது. சற்று நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பிறகு, சாப்பிட அழைத்தார்கள். மேசையில் எனக்காகவென பிரியாணி, சிக்கன் கறி, சலட் என்பன தயாராக இருந்தன. மேலும் பல உணவுகள் தயாராக இருந்தாலும எனக்கு ஏற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு மீண்டும் வீடு வந்தோம். அன்றையப் பொழுது இனிமையாகக் கழிந்தது.

புதன், 14 ஏப்ரல், 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செபா.