திங்கள், 5 ஜூலை, 2010

எனது மூன்று நண்பிகள்

கடந்த வருடம் பங்குனி மாதத்தின் இறுதியில் ஓர் நாள் காலை மருத்துவப் பரிசோதனைக்குப் போவதற்காக எங்கள் 'drive way ''முடிவில் வாடகைக் காருக்குக் காத்துக் கொண்டு நாங்கள் நின்றோம்.

அவ்வழியே போன இளம் பெண்ணொருவர் திரும்பி வந்தார். "ஆன்டி, நீங்கள் இந்தியரா?" என்று கேட்டார். " இல்லை" என்றதும் "அப்போ நீங்கள் இலங்கையரா?" என்று கேட்டார்.

"ஆம். நாங்கள் இலங்கைத் தமிழர்," என்று சொன்னதும் அவர் முகத்தில் மகிழ்ச்சி.

உரையாடல் தமிழில் தொடர்ந்தது. எங்களைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொண்டார். எங்கள் பக்கத்தில் உள்ள பாடசாலையில் அவர் மகள் படிப்பதாகவும் பெற்றார் ஆசிரியர் சந்திப்புக்காக தான் போவதாகவும் பின்னர் சந்திப்போம் என்று சொல்லிச் சென்றார்.

அன்று பின்னேரம் மூன்று மணிக்குப் பின் எங்கள் வீட்டுக்குத் தன் நண்பிகளையும் அழைத்துக்கொண்டு வந்தார். எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். "நாங்கள் பிள்ளைகளைப் பாடசாலையில் விட அல்லது அழைத்துப் போக வரும் போது அடிக்கடி உங்களை வந்து சந்திப்போம். உதவி ஏதும் தேவைப்பட்டால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்," என்று சொல்லித் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள்.

அதன் பின்னர் நேரம் கிடைக்கும் போது வந்து எங்களை அவர்களது வீட்டுக்கு அழைத்துப் போவார்கள். இவர்களது குழந்தைகளும் தாத்தா, பாட்டி என எங்களை அன்போடு அழைப்பார்கள்.

இந்த மூன்று பெண்களின் கணவர்களும் எம்முடன் மிக அன்பாக இருக்கிறார்கள். தெருவில் நாங்கள் நடந்து போவதைக் கண்டால் உடனே "காரில் ஏறுங்கள், கொண்டு போய் விடுகிறேன்," என்று அழைப்பார்கள்.

திங்கள், புதன் ஆகிய நாட்களில் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னதாகக் கமலாவின் மூத்த மகளுக்கு சங்கீதப் பயிற்சி இருக்கும். அந்த நாட்களில் இளைய மகளுடன் இங்கு வந்து விடுவா. எனக்கு மரக்கறிகள் வெட்டுவது போன்ற சமையலுக்கான உதவிகளைச் செய்த பின் மகளைப் பாடசாலையில் விட்டு விட்டுப் போவா.

மருத்துவப் பரிசோதனைக்கு அல்லது இரத்தப் பரிசோதனைக்குப் போக வேண்டியிருந்தால் வந்து அழைத்துச் செல்வார்கள். வீட்டில் விஷேட உணவுகள் தயாரிக்கும் போதும் எங்களுக்கும் கொண்டுவரத் தவறுவதில்லை.

கமலா, மீனா, கௌதமியுடன் அவர்கள் வீட்டிற்கு வந்து போகும் அவர்களது நண்பிகளும் எங்களோடு அன்பாகப் பழகுவது எங்களுக்கு மிக மகிழ்ச்சியாகவும் தனிமையைக் குறைப்பதாகவும் உள்ளது.

இவர்களை நண்பர்களாகப் பெற்றது பெரிய அதிர்ஷ்டமே.

24 கருத்துகள்:

  1. இப்படித்தான் எதிர்பாராத விதமான நல்ல நட்புக்கள் கிடைக்கும். ஆனால், அபூர்வமாக. இல்லையா அம்மம்மா.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. இந்த நாட்களில் உண்மையான நட்பு கிடைப்பது என்பது அரிது. உங்களுக்கு கிடைத்த நட்பு தூய்மையானது, வெறும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் நட்பு. நல்லா இருக்கு, ஆன்டி.

    பதிலளிநீக்கு
  4. தமிழ் சொந்த நாட்டை விட வெளியில்தான் அதிகம் வாழ்கிறது. :)

    பதிலளிநீக்கு
  5. ஜெபா ஆன்ரி, உங்கள் பதிவைப் பார்க்கும்போது, ஒன்று மட்டும் நன்கு தெரிகிறது, உங்களிடத்திலும் தமிழர்கள் குறைவு என.

    வெளிநாட்டில் என்னதான் ஆங்கில மக்களோடும், வேறு மொழி மக்களோடும் பழகினாலும், தமிழர்கள் என்றால்... மனதில் எம்மையறியாமல் ஒரு ஆசை வந்துவிடுகிறது.

    இங்கு எங்கள் ஏரியாவிலும் அப்படித்தான் ஆசியா நாட்டவர்கள் குறைவு... கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். இப்போ இப்போ எங்காவது அருமையாக தென்படுகிறார்கள்.

    ஒருநாள் நான் சூப்பர்மார்கட்டிலிருந்து, போனில் தமிழில் கதைத்தேன், அப்போ அடுத்த அயலிலிருந்து ஒருவர் ஓடிவந்து, என்னை, கண்கள் உருள உருளப் பார்த்தார், எனக்குப் புரிந்துவிட்டது, போனைக் கட் பண்ணிப்போட்டு ஹலோ சொன்னேன்..

    ஆ.. நீங்கள் தமிழோ? இலங்கையோ? நானும்தான் என்றார், வீட்டிலே மனைவியும் இரு மகள்களும் இருக்கிறார்கள், போன் பண்ணுங்கோ, வீட்டுக்கு வாங்கோ என நம்பர் தந்துவிட்டுப்போனார்.

    நான் போன் பண்ணி மனைவியோடு கதைத்தேன், மோலிலும், ஒருநாள் கண்டு கதைத்தேன், ஆனால் ஏனோ தெரியவில்லை எனக்கு, அவர்களோடு பெரிதாக ஒட்டுதல் வரவில்லை, அப்படியே விட்டுவிட்டேன்.

    இக்கதையை எங்கள் அண்ணனுக்குச் சொன்னேன். அவர் பகிடியாகக் கதைப்பார், அப்போ அவர் சொன்னார், உங்களிடத்தில் தமிழ்க் குரல் கேட்டாலே ஓடிவந்து கதைக்கிறார்கள், எங்களிடத்தில் தமிழ்க் குரல் கேட்டால் திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறோம்... அவ்வளவுக்கு தமிழ்மக்கள்தான் அதிகம் என்றார்.

    பதிலளிநீக்கு
  6. அதீஸ்,

    //அவர்களோடு பெரிதாக ஒட்டுதல் வரவில்லை//
    உண்மை தான். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று விளங்குவதில்லை. இங்கும் தமிழ் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒட்டுதல் குறைவு. தொடக்கத்தில் கஷ்டமாக இருந்தது இப்ப பழகி விட்டது. இப்ப நானும், கணவரும், பிள்ளைகளும் என்று இருக்கப் பழகிவிட்டோம். 4 வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் குடும்பம் இங்கு மூவ் பண்ணினார்கள். எனக்கும் அப்ப மகள் பிறந்திருந்த நேரம் பெரிதாக உதவி செய்ய முடியவில்லை. அவர்கள் இங்கிருந்த தமிழ் ஆட்கள் சரியில்லை என்று கனடாவிற்கு ஓடிவிட்டார்கள். என்னத்தை சொல்ல... எங்கள் ஆட்களுக்கு பணம், பதவி..என்று எல்லாமே பழசை மறக்கபண்ணி விட்டது.

    பதிலளிநீக்கு
  7. வாணி, நீங்கள் சொல்வது சரியே.

    ஆனால், ஆட்கள் ஓக்கையாக இருந்தாலும், எமது ரேஸ்ட்டுக்குத் தக்கதாக இருந்தால்தானே ஒத்துவரும். எனக்கு, எப்பவும் கலகலப்பாகப் பேசுபவர்களை டக்கெனப் பிடித்துக்கொள்ளும்.

    சில உறவினர்கள் இருக்கிறார்கள், தவறாமல் போன் பண்ணுவார்கள், ஆனால் ஹலோ... நான் சோ அண்ட் சோ பேசுகிறேன்... என்பதுமட்டும் சொல்லிப்போட்டு, போனைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள்.....

    கடவுளே... நானே தான், பின்பு யோசித்து யோசித்து, கேள்வி கேட்டால் பதில் மட்டுமே வரும், என்ன செய்வதெனத் தெரியாமல், ஏதாவது சொல்லி போனை வைத்துவிடுவேன்..... இப்படிப் பலவிதம்...

    பதிலளிநீக்கு
  8. எனக்கு அதிராக்கு போன் பண்ணப் பயமா இருக்கே! ;)

    பதிலளிநீக்கு
  9. அதீஸ், நீங்கள் சொல்வது போல நாங்கள் அவர்களின் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்கி எடுக்கோணும். கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளி என்பது போல நிற்பார்கள்.

    //எப்பவும் கலகலப்பாகப் பேசுபவர்களை டக்கெனப் பிடித்துக்கொள்ளும்.//

    எனக்கும் அதே!!!!

    ( செபா ஆன்டி, இமா ஆன்டி இதில் அரட்டை அடிப்பதற்கு திட்ட வேண்டாம். )

    பதிலளிநீக்கு
  10. அனாமிகா துவாரகன், ஹைஷ், வானதி காலையில் பார்த்த உங்கள் மூவரது பதிவுகளும் இப்போ மாயமாகிவிட்டன.
    இருப்பினும் உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் எனது நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  11. ஜெய்லானி,
    தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அதிரா,
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. என்னதான் வேற்று மொழி பேசும் நண்பர்கள் எங்களுடன் நன்றாகப் பழகினாலும் தமிழ் நண்பர்களுடன் பழகும் போது ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வானதி & அதிரா,
    தயக்கம் வேண்டாம். தொடருங்கள் உங்கள் உரையாடலை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நானும் அறிந்து கொள்ளுவேனே.
    நானும் முன்னரெல்லாம் யாரோடாவது பேசுவதென்றால் சிறிது தயங்குவேன். இப்போ நிலைமை மாறி விட்டது. தனிமை வலிந்து பேசும் நிலைக்கு என்னை மாற்றி விட்டது.

    பதிலளிநீக்கு
  14. செபா ஆன்டி! எனக்கும் அப்படியே ஆனாலும் பலர் தமிழில் பேசினாலும் நம்மிடம் பேசும் போது ஆங்கிலத்தில் பேசுவார்கள்... அது ஏனோ அப்படியும் மக்கள்... எனக்கும் ஆசையாக இருக்கு இப்படி யாராவது கிடைக்க...
    தனிமையே வேண்டாம்... எப்போதும் யாராவது ஆன்லைனில் இருக்கிறோமே...:))

    பதிலளிநீக்கு
  15. இலா,
    ஆங்கிலத்தில் பேசினால், அதுதான் கெளரவம் என்று நினைக்கிறார்களோ என்னவோ. பலர் அப்படித்தான் பேசுகிறார்கள்.வேறு வழியின்றி நாமும் பேச வேண்டியுள்ளது.
    மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. சிலருடைய வாழ்க்கையில் இப்படித்தான் இதமான உறவுகள் திடீரென்று கிடைக்கும். அது ஆழ்ந்த அன்பாகவும் காலப்போக்கில் மாறி விடும். சிறு வயதில் ஏற்படும் நட்பை விட வாழ்க்கையின் மாலை நேரத்தில் கிடைக்கும் இந்த மாதிரி நட்புகள் மிகவும் இதமானவை!

    பதிலளிநீக்கு
  17. சரியாகச் சொன்னீர்கள் அக்கா. சிறு வயது நட்புகளோடு தொடர்புகள் இருந்தாலும் மனம் முதிர்சியடந்த பின் அமையும் நட்புகள் இதமானவைதான். எனக்கும் இப்போது சில இதமான உறவுகள் கிடைத்திருக்கிறார்கள். வாழ்க்கை முழுவதும் இந்த நட்பு தொடரும் என்று மனது சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  18. மனோ சாமிநாதன்,
    உங்கள் கருத்து மிகவும் சரியானதே. இந்த வயதிலே தனிமை என்பது மிகவும் கொடுமையானதே. எங்கள் நண்பர்கள் இதனைப் போக்குவதில் பெரிதும் உதவுகிறார்கள். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. //இமா சொன்னது…

    எனக்கு அதிராக்கு போன் பண்ணப் பயமா இருக்கே! ;) //

    ஆமா, எப்பவும் அவங்க வீட்டில பூனைதான் போனை எடுக்குமாமே அதானே..!!ஹா..ஹா..

    பதிலளிநீக்கு
  20. ///எனக்கும் அப்படியே ஆனாலும் பலர் தமிழில் பேசினாலும் நம்மிடம் பேசும் போது ஆங்கிலத்தில் பேசுவார்கள்... அது ஏனோ அப்படியும் மக்கள்... ///
    இலா...., அதிராவோ கொக்கோ:), இன்று நல்லா மாட்டினீங்களா?:), அடுத்தவர்கள் செய்யும்போது எமக்கு எரிச்சல் வருகிறது.... ஆனால் நாம் மட்டும் எல்லா இடத்திலும் ஆங்கிலத்திலேயே எழுதலாமோ? அதிலும் தமிழில் பண்டிதராக(அதிராவைப்போல:)) இருந்துகொண்டு...

    ஆ.... வச்சுட்டேன் வெடி... கடவுளாலகூட இன்று என்னைக் காப்பாற்றமுடியாமல் போகப்போகுதே....

    ///ஆமா, எப்பவும் அவங்க வீட்டில பூனைதான் போனை எடுக்குமாமே அதானே..!!ஹா..ஹா.. /// ஆ.... ஜெய்..லானி, கையைக் கொடுங்கோ... (மு.கு:சேர்ஜிகல் ஜெல் போட்டுக் கழுவிப்போட்டு:))))).

    பி.கு:
    இலா.... நாங்க இப்பவும் கட்டிலுக்குக் கீழதான், ஸ்பெயினுக்காக கை தட்டிக்கொண்டு.....

    பதிலளிநீக்கு
  21. நான் முன்னமே நினைச்சனான், பூஸார் வந்து இப்பிடிச் சொன்னாலும் சொல்லுவார் எண்டு. ;))

    பதிலளிநீக்கு
  22. இமா சொன்னது…
    நான் முன்னமே நினைச்சனான், பூஸார் வந்து இப்பிடிச் சொன்னாலும் சொல்லுவார் எண்டு. ;))///
    நீங்கள் மனதில் நினைப்பீங்கள் நான் வெளியே சொல்லிடுவேன்.

    ஆனால், நினைவோடு நிறுத்திவிடுவதால், உங்களுக்கு அடி கிடி கிடைக்காது:), நான் அடியும் வாங்குவேன்:).

    இலா இன்னும் ஐபோன் செக் பண்ணவில்லை என நினைக்கிறேன்:), அதுக்குள் பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்.

    பதிலளிநீக்கு